Tuesday, January 29, 2013

நாடா இல்லை வெறும் காடா?





ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்த அல்லது தூண்டும் மனித மிருகத்துக்கு தண்டனை  நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது  

அதனை தெரிந்து கொள்ளுங்கள்
சீனாவில்,நீதி விசாரணையின்போது குற்ற‍ம் நிரூபி க்கப்பட்டால் 
வன்கொடுமை புரிந்தவனுக்கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்
மலேசியாவில்,குற்றவாளியை மரணதண்டனை கொடுத்து அவனை கொன்றுவிடுவார்கள்.
யுனைடெட் அரபு எமிரேட்டில், ஏழு நாட்களுக்குள் விசாரித்து குற்றவாளியை 
தூக்கில் தொங்க விட்டு மரண தண்டனையை நிறைவேற்று வார்கள்.
ஈரானில்,வன்கொடுமை புரிந்த குற்றவாளி என்று உறுதியானதும் அடுத்த‍ 24 மணி நேரத்திற்க்குள்,
அவனை கற்களால் தாக்கியும் அவனுக்கு பொது இடத் தினில் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்றுவார்கள்.
ஆப்கானிஸ்தானில்,வன்கொடுமை குற்றவாளியை பொது இடத்தில் அவனை தூக்கி லிட்டு, 
அவனது தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக தண்டிக்க‍ப்படுவார்கள்.
மங்கோலியாவில்,இந்த வன்கொடுமைக்கு ஆளாகி தனது வாழ்க்கை இழந்த‌
அந்த பாதிக்க‍ப்பட்ட‍ அப்பாவிப் பெண்ணின் மூலமாகவே
அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 
ஈராக்கில்,வன்கொடுமை குற்றவாளியை அவன் கடைசி மூச்சு இருக்கும் வரை
அவனை கல்லால் அடித்தே கொல்லப்படும் தண்டனையை நிறைவேற்றுகிறார்க‌ள். .
தாலிபானில்,வன்கொடுமை குற்றவாளியின் கால்வேறு கைவேறு என்று ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எடுத்தும்,
கல்லால் அடித்தும் கடைசியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் தண்ட னை உண்டு.
இன்னும் பல நாடுகளில்
பெண்களுக்கு எதிராக குற்ற‍ம் புரிபவர்களுக்கு உடனடியாக கொடூரமான தண்டனை விதிக்க‍ப்பட்டு வருகிறது.ஆனால்,
நம் இந்தியாவில் மட்டும் பல பெண்கள் இயக்கமும்,மனித உரிமை கழகமும்,
பொது மக்களும் போராட்டம் செய்தால்தான் கைதே செய்வார்கள் குற்றவாளியை  
நம் ஊர் காவல்துறை பிறகு,குற்றவாளிக்கு
குறிப்பிட்ட‍ வருடங்கள் வரை சிறைத் தண்டனை என்னும் பெயரில்  24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும். 
தினந்தோறும் வேளை தவறாமல் நல்ல‍ சாப்பாடும் அரசாங்கம் வழங்கி வருகிறது.
அப்புறம் நம் நாட்டில் குறைந்து விடும்தானே பெண்கள் மீதான வன்புணர் கொடுமை??????? 

Monday, January 28, 2013

பவர்கட் பிரச்னையா...சோலாருக்கு மாறுங்க !


'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால், அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.
மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த  விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.
''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்... அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.
ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.
பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்... குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.
தற்போது... வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்...'' என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.
''சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!'' என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் 'மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்'. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ''சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!
வீடுகளில்... ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ... மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்'' என்று சொன்னார்.
எல்லாம் சரி... சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?
அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ''அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை... சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்... மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.
இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்... (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்'' என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,
''இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல... இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!'' என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!
நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!

சோலார் தரும் லாபம்!
மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்...  டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.
மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...)  840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).
இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது... 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்... 'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்... மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.
சூரிய மின்சாரம்...     அசத்தும் குஜராத்!
ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து  214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது, குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.
தமிழகத்திலும் சோலார் பார்க் அமைத்தால்?!
சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in என்ற வலைதளத்தை அணுகலாம்.
தொடர்புக்கு: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே. சம்பத் மாளிகை
ஐந்தாவது மாடி, 68, காலேஜ் ரோடு
சென்னை 6, 
தொலைபேசி: 044-28224830.

நன்றி: அவள் விகடன், 23-10-2-12
சா.வடிவரசு
படங்கள்: எம்.உசேன், ஆ.முத்துகுமார், ஜெ.வேங்கடராஜ்

Saturday, January 26, 2013

ஞாபக சக்தி வளர்ப்பது எப்படி ?

* நான் மிக மோசமான நினைவாற்றலை கொண்டவன்.
* நான் ஞாபக சக்தி மிகவும் குறைவாக உள்ளவன்.* படித்தது எனக்கு ஞாபகத்திற்கு வருவதில்லை.* நினைவாற்றலில் நான் மற்றவர்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளேன்.* இது போன்ற கருத்துகள் உங்களிடமும் இருக்கலாம். ஆம் எனில், ஓர் அறிவியல் பூர்வமான உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த மனிதனுக்கும் குறைந்த அளவு ஞாபக சக்தி அதிக அளவு ஞாபக சக்தி என்பதை வகுத்துக் கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது.
உதாரணமாக: நினைவாற்றலை ஒரு நூலகத்தோடு ஒப்பிடுவோம். அதில் எவ்வாறு குறிப்பிட்ட ஓர் இடத்தில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்தாலும் நமக்குத் தேவையான ஒரு புத்தகத்தை எடுக்க முடியுமோ, அதுபோல் நம் நினைவாற்றலை தேவையான முறையில் பயன்படுத்த முடியும்.
எப்படி?
நூலகத்தில் ‘‘Index’’ என அழைக்கப்படும் முறையின் மூலமாக புத்தகங்கள் வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோல் நம் நினைவில் உள்ள விஷயங்களை சரியாகப் பாகுபடுத்தினால் அவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள எளிதாய் இயலும்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 1. கற்றல் மற்றும் மனப்பாடம் செய்தல்:
நாம் பாடங்களை படிக்கின்றபொழுது, அவற்றின் பொருளை நன்றாகப் புரிந்து கொண்டு படிக்க வேண்டும். புரிந்து கொண்டு படிப்பதே நம் நினைவில் ஆழமாகப் பதியும். நமக்குத் தேர்விலும் பயன்படும். புரிந்து கொள்ளாமல் படித்தால் அது உடனே மறந்து போய்விடும். ஆகையால் பயனில்லை. அதேபோல் நாம் ஆர்வத்துடன் படித்தால் அவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் இருக்கும். ஆர்வமில்லாமல் படிப்பவையும் புரிந்துகொள்ளாமல் படிப்பதைப்போன்று மறந்து போய்விடும். எனவே படிப்பில் ஆர்வம் தேவை.
2. நினைவிலிருத்தல் (Retention):
நாம் படித்தவற்றை நம் நினைவில் ஆழப்படியும் படி நிறுத்தி வைத்தலே நினைவிலிருத்தல் ஆகும். நன்றாகப் பொருளுணர்ந்து படித்தால் நினைவிருத்தல் தானாக நிகழும்.
3. நினைவுக்கழைத்தல் (Recall):
நாம் படித்த பாடங்களை அவ்வப்பொழுது நாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். நாம் படித்தவை பதிந்து உள்ளதா என்பது இவ்வாறு செய்து பார்க்கும் பொழுது தெரிந்து விடும். இப்படிச் செய்தால் நாம் தேர்வில் நன்றாக எழுத முடியும்.
4. நினைவு கூர்தல் (Recognition):
நம் பாடங்களை நினைவுபடுத்திக் கொள்வது நினைவு கூர்தல் ஆகும். உதாரணமாக கணிதத் தேர்வு எழுதும்பொழுது அறிவியல் பாடம் நினைவில் வராமல் கணிதம் மட்டுமே நினைவில் வரும்படி குறுக்கீடுகள் இல்லாமல் நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டும்.
5. மீண்டும் கற்றல்:
தேர்வு சமயங்களில் புதியதாக ஒரு பாடத்தைப் படிப்பது கூடாது. நாம் ஏற்கெனவே படித்தவற்றை மீண்டும், மீண்டும் படித்தால் நம் நினைவில் நன்றாகப் பதிந்து விடும்.
திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை:
இடைவிட்டு கற்றலும் மொத்தமாக கற்றலும் (Spaced and massed learning):
ஒரு பாடத்தைப் படிக்கும்போது அவற்றில் உள்ள வினா - விடைகளை தனித்தனிப் பிரிவாகப் பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பிரிவாகப் படித்து முடித்த பின்பும் சிறிது நேரம் இடைவெளி விட்டு பின்பு படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாகப் படித்தால் நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகும். உடனடித் தேவைக்கு மட்டும் மொத்தமாகப் படிக்கலாம். ஆனால் இவை நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் நிற்காது. ஆனால் இடைவெளிவிட்டுப் படித்தால் நீண்ட நாள்களுக்கு நம் நினைவில் பதிந்து இருக்கும்.
முழுமையாகக் கற்றலும், பகுதியாக கற்றலும் (Whole and part learning):
அதாவது நாம் சிறிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடையையோ முழுமையாகக் கற்க இதுவே சிறந்ததாகும். மனப்பாடம் செய்வதற்கு இவ்விரு முறைகள் பயன்படுகின்றன. ஆனால் பெரிய அளவில் உள்ள செய்யுளையோ அல்லது விடைகளையோ பகுதி, பகுதியாகக் கற்றால் நன்றாக நினைவில் பதியும். மேலும் இவ்விரு முறைகளையும் சேர்த்துப் படித்தால் அதாவது முதலில் பகுதி, பகுதியாகப் படித்து விட்டுப் பிறகு முழுமையாகப் படித்தால் நன்றாக மனப்பாடம் செய்ய இயலும். அதாவது நன்றாக நம் நினைவில் நிற்கும்.
ஒப்பித்தல் முறை (Recitation method):
இம்முறையில் நாம் கற்றவற்றை நாமே தொடர்ந்து பார்க்காமல் சொல்லிப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்யும்பொழுது பிழைகள் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். தனக்குத்தானே ஒப்பித்துப் பார்த்துக் கொள்ளும் பொழுது கடினமானப் பகுதிகளை முதலிலேயே தெரிந்து கொண்டு அதற்குத் தனிக் கவனம் செலுத்திப் படித்துக் கொள்ளலாம்.
நினைவுக்குறிப்புகள் (Mnemonic Devices):
கற்பவற்றை நாம் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் கற்கும் செய்திகளுக்கு அல்லது விடைகளுக்கு அவற்றோடு தொடர்புடைய ஒரு பொருளையோ அல்லது எண்களையோ நினைவுக்குறிப்புகளாக எடுத்துக் கொண்டு படித்தால் நன்றாக நினைவில் இருக்கும். உதாரணமாக Vibgyor  என்ற சொல் தெரிந்தால் போதும் நிறமாலை (வானவில் நிறங்கள்) நமக்குத் தெரிந்துவிடும்.
நினைவு என்பது நம்மிடம் உள்ள தனிச்சிறப்புத் தகுதியாகும். இதைச் சரியாக கைகொள்ளும்போது நம் குறையாய்த் தென்பட்ட பல விஷயங்கள் திருத்தப்பட்டு நினைவுத்திறன் சிறப்பாய் இருக்கும்.